2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் காரணமாக பல நாடுகள் தமது எல்லைகளை மூடின. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் சுற்றுலாதுறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.
சுற்றுலாத்துறையை நம்பியிருந்த பல நாடுகளின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்தது.
கொரோனா தடுப்பூசியின் வருகையின் பின்னர், ஏறக்குறைய ஒரு வருட காலத்தினுள் பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளின் வருகைக்காக தமது எல்லைகளை மீளத் திறந்தன. ஆனால் ஆஸ்திரேலியா மட்டும் தனது எல்லைகளை மீளத் திறக்கவேயில்லை. தனது சொந்த மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஆஸ்திரேலியா அரசு இந்த முடிவை எடுத்திருந்தது.
இருப்பினும் கடந்த 21ம் திகதி (21/02/2022) முதல், அதாவது ஏறக்குறைய 700 நாட்களின் பின்னர் தனது எல்லையை வெளிநாட்டவர்களுக்காக ஆஸ்திரேலியா திறந்துள்ளது. முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிளை பெற்றவர்கள் மட்டுமே நாட்டினும் அனுமதிக்கப்படுவார்கள்.
முதல் நாளே ஐம்பதிற்கும் மேற்பட்ட விமானங்கள் சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்தன. மேற்கு ஆஸ்திரேலியா தனது எல்லையை வெளிநாட்டவர்களுக்காக வரும் மார்ச் 3ம் திகதி முதல் திறக்கவுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி பாரிய பொருளாதார நெருக்கடிகளை ஆஸ்திரேலியா சந்தித்திருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் சுற்றுலா சம்பந்தமான விடயங்களை australia.com எனும் இணையத் தளத்தில் தெரிந்துகொள்ள முடியும்.