இன்று (15/11) பாராளுமன்றம் 10மணிக்கு கூடிய வேளையில், மகிந்த ராஜபக்சவிற்கெதிராக பலத்த கோஷங்கள் எழுப்பப்பட்டன. சபாநாயகரின் முயற்சியால் மகிந்த ராஜபக்சவிற்கு விசேட உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. “நான் ஜனாதிபதியாக, பிரதமராக பதவி வகித்துள்ளேன். எனவே இபோதைய பிரதமர் பதவி ஒன்றும் எனக்கு பெரிதல்ல” என்று உரையை ஆரம்பித்த மகிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாக சாடினார். நாடு அதள பாதாளத்தை நோக்கிப் போவதாகவும், சபாநாயகர் கட்சி சார்ந்து செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மகிந்த ராஜபக்ச உரையாற்றி முடிந்ததும் அவரது அணியினர் சபை நடவடிக்கைகள் குழப்பி, பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டனர்.
சபாநாயகரை நோக்கிச் சென்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், தாக்க முயற்சி செய்தனர்.
சபாநாயகரின் ஒலிவாங்கி வயரைப் பிடித்து இழுத்த மகிந்த அணி பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தனது கையை, தானே காயப்படுத்திக்கொண்டார்.
அவரது உரை முடிவுற்றதும், சபை நடவடிக்கைகள் குழப்பி, பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் அவரது அணியினர் ஈடுபட்டு, இறுதியாக பாராளுமன்றத்தை செயலிழக்கச் செய்தனர்.
நாளைக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன நடக்கும் என்பதை மேற்குறிப்பிட்ட நிகழ்வு தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.