🔴 707 வன்முறைச் சம்பவங்கள்
🔴 75 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் சேதம்
🔴 230 பேர் கைது
🔴 மகிந்தவை காவல்துறை கைது செய்யுமா?
கடந்த 9ம் திகதி மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுனவின் காடையர்களினால் கொழும்பில் வன்முறைகள் தொடங்கப்பட்டது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்களினால் பிரதமர் உட்பட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன.
மொத்தமாக 707 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில் இதுவரை 230பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் 71 பேரும்,
தென் மாகாணத்தில் 43 பேரும்,
மத்திய மாகாணத்தில் 17 பேரும்,
வட-மேல் மாகாணத்தில் 36 பேரும்,
வட-மத்திய மாகாணத்தில் 47 பேரும்,
சப்ரகமுவ மாகாணத்தில் 13 பேரும்,
ஊவா மாகாணத்தில் 2 பேரும்,
வட மாகாணத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைகளை அனுமதிக்க முடியாது. இருப்பினும் அரசியல்வாதிகளில் பெரும்பாலனவர்கள் சட்டரீதியற்ற முறையிலேயே சொத்துக்களைச் சேர்த்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் கொள்ளையடித்த சொத்துக்களை மீள இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமென்பது. (உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி குறைந்தது 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் வெளிநாடுகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.)
இலங்கை காவல்துறை அந்த குற்றச்சாட்டை ஏற்று விசாரணைகளை முன்னெடுப்பார்களா? அது தொடர்பாக சம்பந்தப்படவர்களைக் கைது செய்வார்களா?
அல்லது புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பாக ஏதும் நடவடிக்கைகளை மேற்கொள்வாரா?
நாட்டைக் கொள்ளையடித்த பெருங்கொள்ளையர்களை ஹெலிக்கொப்டரில் வழியனுப்பி வைத்துவிட்டு, சிறு வன்முறையாளர்களை சிறையில் அடைக்க முற்படுகிறது ரணில்-கோத்தபாய அரசு.