ஆப்கானிஸ்தான் தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 60பேர் உயிரிழந்துள்ளதுடன், 140பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்கப் படையினரும் உள்ளடங்குவர். மேலும் 15 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் என நம்பப்படும் மேற்படி தாக்குதலில், குண்டு வெடிப்பிற்கு முன்னர் விமான நிலைய முகப்பில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ISIS பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தானிற்கான பிரிவு மேற்படி தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளது.
தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடென் குறிப்பிடுகையில், “மறவோம், மன்னிக்கமாட்டோம்’ என தெரிவித்துள்ளதுடன், வரும் 31ம் திகதி வரைக்கும் மீட்புப் பணி தொடருமென தெரிவித்துள்ளார். இதுவரையில் கடந்த 15ம் திகதியிலிருந்து 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்கப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆஸ்திரேலிய விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த மக்கள் மீட்புப் பணி முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுக்காப்புத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார். இதுவரையில் 4,000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஆஸ்திரேலியப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.