இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று (16/08) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 94.
1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய், இந்தி மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். பல்வேறு கவிதை நூல்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். தனக்கே உரிய நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்.
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லமையில் அச்சுறுத்திக் கொண்டிருந்தநிலையில், அமெரிக்காவின் நெருக்கடியையும் மீறி துணிவுடன் அணு ஆயுத சோதனையை நடத்தி முடித்தார்.
வாஜ்பாயின் அனுமதியுடன், அப்துல் கலாம் தலைமையில் 1998ம் ஆண்டு மே 11ம் தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சி தடையை வாஜ்பாய் முறியடித்தார்.