இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தாம் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இடைக்கால அரசு ஒன்றை அமைக்க தான் அடிப்படையில் இணங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் தனித்து செயற்படும் 39 உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் கடிதம் மூலம் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளதுடன், நாளை மறுதினம்(29/04) காலை 10:30 இது தொடர்பான முக்கிய கூட்டத்தையும் ஒழுங்கு செய்துள்ளார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.
இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச தான் பதவி விலகும் எண்ணம் இல்லை எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளதுடன், மக்கள் ஆணையைப் பெற்று பதவிக்கு வந்த எம்மை, பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் பதவி நீக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
மறுபக்கம், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகிய பின்னரே தாம் இடைக்கால அரசாங்கத்தில் இணைவோம் என சஜித் பிரேமதாசா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கடும் இழுபறியிலுள்ள இந்த அரசியல் சிக்கலுக்கு மகாநாயக்கர்களைவிட, மக்கள்தான் தெளிவான ஒரு பதிலை உறுதியாக வழங்கவேண்டும்.