நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையான பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றுள்ளதால், கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவிற்கு வந்தது.
இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 2.44 மடங்கு அல்லது 2.57 மடங்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்தியஸ்தரே தீர்மானிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்திவந்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும், இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடமால் உறுதியுடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.