ரணிலின் வரவு செலவு திட்டம் பாரிய ஏமாற்றம் – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(14/11) முன்வைக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உலக உணவுத் திட்டம்(WFP), உலக வங்கி(World Bank) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ICRC) ஆகியவற்றால் வறுமை மற்றும் உணவின்மை போன்றவற்றால் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாக பெருந்தோட்ட மக்களும், மாநகர பாமர மக்களுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் விசேட ஒதுக்கீட்டு திட்டங்கள் எதுவுமே இடம்பெறாமை எமக்கு பலத்த ஏமாற்றத்தைதே தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆனால் நலிவடைந்த நம் மக்களை மறந்துவிட்டு, பயிரிடப்படாத தோட்டங்களில் உள்ள காணிகளை மக்களுக்கு பகிர்ந்து தருவதாக முன்னர் குறிப்பிட்டிருந்த பிரதமர் ரணில், தற்போது அந்த காணிகளை புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது தொடர்பாகவே தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தமை நமது மக்களை கொல்லாமல் கொல்கிறது எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles