இலங்கையில் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நாடு முற்றாக முடங்கும் நிலை தோன்றியுள்ளது.
இன்றிலிருந்து(28/06) வரும் 10ம் திகதிவரை பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
👉சுகாதார சேவைகள்
👉துறைமுக சேவைகள்
👉விமான சேவைகள்
👉பாதுகாப்பு சேவை
👉விவசாய சேவைகள்
👉உணவுப் போக்குவரத்து சேவைகள்
ஜூலை 10ம் திகதிவரை இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வருவதற்கான சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால், கையிருப்பிலுள்ள எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்துகளும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களை இயன்றளவு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுவதாக இருந்த நகர்ப்புற பாடசாலைகள், தற்போது ஜூலை 10ம் திகதிவரை மூடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மின்சார துண்டிப்பு நேரமும் கணிசமாக அதிகரிக்கப்படும் சாத்தியமுள்ளது.
இதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டினை சீராக்க அமைச்சர்கள் சிலர் கட்டார் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருவதால், ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவது எந்தளவிற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.
மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிடமிருந்து எரிபொருளை இலங்கை ரூபாய்களில் பணம் செலுத்தி கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுவருகின்றன.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் முறையற்ற விதத்தில் நாட்டு நிலைமைகளைக் கையாண்டு வருவதுடன், மக்களுக்கு உண்மை நிலைவரங்களை தெரியப்படுத்தவும் பின்னடித்து வருகின்றனர்.