இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த, நச்சுப்பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று(24/11) முதல் அமுலிற்கு வந்துள்ளது.
இதன்படி, 5g அல்லது அதற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருட்களை வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க முடியும்.
இதேபோன்று, 500g முதல் ஒரு கிலோ வரையிலான அபின் வகை போதைப்பொருள் வைத்திருப்பின் ஆயுள் தண்டனையும், ஒரு கிலோவிற்கு மேற்பட்ட அபின் வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின் மரண தண்டனையும் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
5g அல்லது அதற்கு மேலான ஹெரோயின், கொக்கேன் மற்றும் மோர்பீன் வகையான போதைப்பொருட்களை வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
5g அல்லது அதற்கு குறைவான ஹெரோயின், கொக்கேன் மற்றும் மோர்பீன் வைத்திருப்பின் அல்லது விற்பனை செய்யின், இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரையிலான தண்டப்பணம் அறவிடப்படுவதுடன், பத்தாண்டுகளுக்கு குறையாத, இருபது ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.