54 வருடங்களின் பின்னர் இலங்கையின் முதல் சர்வதேச விமான நிலையமான இரத்மலானை விமான நிலையத்திலிருந்து மாலைதீவிற்கான விமான சேவைகள் ஆரம்பமாகின்றன என விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய இராஜாங்க அமைச்சர் D.V.ஜானக தெரிவித்துள்ளார்.
மார்ச் 27 முதல் இலங்கைக்கும், மாலைதீவிற்குமிடையிலான பிராந்திய விமான சேவையை மாலைதீவு அரச விமான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. வாரத்தில் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இவ்விமான சேவை, மே மாதத்தில் இருந்து ஐந்தாக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்படி விமான சேவைக்காக, 50 இருக்கைகளைக் கொண்ட டாஷ்-8 விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் கவனிப்பாரற்று மூடப்பட்டுள்ளமையும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியுள்ளது. தமிழ் நாட்டிற்கும், யாழ்பாணத்திற்கும் இடையிலான விமான சேவைகள், 2020ல் ஏற்பட்ட கொரோனா பரவலின் பின்னர் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய யாழ்-இந்திய விமான சேவைகள் மீண்டும் ஆரம்ப்பிக்கபடாமை, அரசின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற ஐயப்பாடும் மக்களிடையே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.