நேற்று(19/04) கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், 16 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவத்தில் எட்டு காவல்துறையினரும் காயமடைந்திருந்தனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜீலி சங் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்ததாவது, ரம்புக்கணை சம்பவ செய்தியைக் கேட்டு தான் கவலையடைந்ததாகவும், பொதுமக்களுக்கோ அல்லது காவல்துறையினருக்கோ எதிரான வன்முறைச் சம்பவங்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், ரம்புக்கணை சம்பவம் தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரனை அவசியம் என்பதுடன் அமைதிவழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் மக்களின் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளர் ஹன்னா சிங்கர்-ஹம்டி ரம்புக்கணை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தெரிவித்ததாவது,
ரம்புக்கணையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கைகள் என்னை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியது. மேலும் அடிப்படை உரிமைகள் மூலம் மக்கள் மேற்கொள்ளும் எதிர்ப்புப் போராட்டங்களின்போது, மக்களின் மீது பிரயோகிக்கப்படும் பலம் கட்டுப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்கள்/நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் தெளிவாக அவதானித்துக்கொண்டிருப்பதை மேற்குறித்த அறிக்கைகள் நாம் மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.