மஹிந்த ராஜபக்சவும், அவரது மகன் நாமல் ராஜபக்சவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியில் இணைந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்காத பல உறுப்பினர்கள் உள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செல்வாக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது. ஆகவே தான் நினைத்ததை செய்ய மஹிந்த ராஜபக்சவிற்கு சிறந்த கட்சியாக பொதுஜன பெரமுனவே உள்ளது.
எவ்வித அரச மட்ட ஆதரவின்றி கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 40% வாக்குகளைப் பெற்று, ஐ.தே.க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இப்போது பெரும் அரச மட்ட ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. எனவே வரும் தேர்தலில் தமது முழுப்பலத்தையும் பிரயோகித்து பெரு வெற்றியடைய முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும் தேர்தல் காலத்தில் சிங்கள மக்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேலும் வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன வடக்கு கிழக்கிலும் நேரடியாகப் போட்டியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.