எரிபொருள் விலை அதிகரிப்பால் நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் பிரதான பாதைகள் முற்றாக மூடப்பட்டு, பொதுப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பாணந்துறையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் காலி வீதியை முற்றாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொழும்பு காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தம்புள்ள நகரப் பகுதியிலும் ஆர்ப்பாட்டத்தால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொழும்பு-சிலாபம் வீதியில் காக்காபல்லிய பிரதேசத்தில் தனியார் பேருந்து சேவை வழங்குனர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தால் வீதிப் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
கேகாலை ரம்புக்கனை பிரதேசத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, பதற்றமான நிலைமை தோன்றியுள்ளது. வீதிகளில் ரயர்கள் எரித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு அவிசாவளைப் பிரதேசத்திலும் பதற்றம் நிலவுகின்றது. தனியார் பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் நடு வீதியில் முச்சக்கரவண்டிகளை நிறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.