பாகிஸ்தானில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற 272 தொகுதிகளுக்க்கான பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் முஸ்லிம் லீக் கட்சி 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார். தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்துத் தெரிவித்த இம்ரான் கான், 22 வருட கால போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி மூலம் தாம் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இந்திய, சீனா போன்ற அயல் நாடுகளுடன் சிறந்த உறவைப் பேண விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமருக்கான இல்லம், மிகப்பெரும் பரப்பில் உள்ள நிலையில், அந்த வீட்டை தான் பயன்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர்களுக்கான குடியிருப்புப் பகுதியில்தான் பிரதமர் என்ற வகையில் தானும் இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
மாறாக, தற்போதுள்ள பிரதமரின் இல்லத்தை ஒரு கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.