இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பேருந்து கட்டணங்களும் 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன்படி இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகளில் 17 ரூபாயிலிருந்த ஆரம்ப கட்டணம், 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு முற்றுமுழுதாக டீசல் விலை உயர்வினால் ஏற்பட்ட கட்டண அதிகரிப்பாகும் என போக்குவரத்து அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு, டீசலிற்கு அப்பாற்பட்டு தேய்மான செலவுகள் அதிகம் என மாகாணங்களிற்கிடையேயான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
15 வீத அதிகரிப்பு நீண்ட தூர பயணிகள் சேவைக்கு போதுமானதல்ல எனவும், டயர், ரியூப் மற்றும் லுப்பிரிகண்ட் போன்றவற்றின் விலை 35% இனால் உயர்ந்துள்ளதாகவும், எனவே நீண்ட தூர சேவைக்கு மேலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.