80களில் இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீதேவி (54), நேற்று (24/02) டுபாயில் மாரடைப்பால் காலமானார். ஸ்ரீதேவியின் மரணம் தமிழ், ஹிந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி தமிழ்நாடு சிவகாசியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ரஜினி, கமல் உடன் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு தமிழ் நடிகையாக இருந்து, ஹிந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக பெரும் புகழுடன் இருந்த ஒரே ஒரு நடிகை ஸ்ரீதேவி மட்டுமே.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த பின்னர் திரையுலகைவிட்டு ஒதுங்கியிருந்தார். 2012ல் “இங்கிலீஷ் விங்கிலீஷ்” என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி, 2015ல் இளைய தளபதியின் “புலி” திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவே இவர் நடித்த இறுதி தமிழ்ப்படமாகும்.