ஒகி புயலின் போது கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இந்திய கடற்படையினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ள 600 தமிழக மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப சகல உதவிகளையும் செய்வதாக குஜராத் அரசு உறுதியளித்துள்ளது. இன்னும் சில மீனவர்கள் மகாராஷ்டிரா, கேரளா, லட்ச தீவுகள் பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீமான் கண்டனம்,
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்றும் எவ்வித வசதிகளும் தமிழக அரசிடம் இல்லையென குற்றம் சுமத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒகி புயலின்போது கடலுக்குள் சென்ற மீனவர்களின் எண்ணிக்கை 500தான் என அரசு சொல்கிறது. ஆனால், சுமார் 2,000 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர் என மீனவர்களின் குடும்பங்கள் சொல்கிறார்கள். இது முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் புயலுக்கு பிறகே மீனவர்கள் கடலுக்குள் சென்றார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெரிவித்தமையையும் அவர் கண்டித்தார்.