முக்கிய கட்சிகள் அமைச்சரவையில் இணைய மறுப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் முக்கிய கட்சிகள் இணைய மறுத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் ரணிலின் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும் முடிந்தால் ரணில் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.

ரணில் அரசாங்கத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியும் அமைச்சுப் பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாது என, இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசில் இருந்து பிரிந்து, பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினரும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் எடுக்கப்போவதில்லை என விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். மேலும் புதிய பிரதமரால் இந்த பொருளாதார நெருக்கடியை சீராக்க முடியாது என தாம் நம்புவதாவும், இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமே அவர்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய இணைப்பு :
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles