ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தினை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும், படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் இதுவரை 50பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட, பல விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஊடகவியலாளர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு கலகமடக்கும் வாகனம், ஒரு முச்சக்கரவண்டி, வீதிப் போக்குவரத்து காவல்துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், காவல்துறையினரின் ஒரு வாகனம் உட்பட இராணுவத்தினரின் ஒரு பேருந்து என்பனவும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 45பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று (01/04) நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.