இலங்கை காவல்துறையினரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்போனதால், திகண பிரதேசத்திற்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
சுமார் 200 இராணுவ வீரர்கள் கொண்ட சிங்க படையணி திகண பிரதேசத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
திகண பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், சில கடைகள், வீடுகள் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தால், திகண பிரதேசத்தின் ஊடான கண்டி-மஹியங்கண வீதி முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது.
இருப்பினும், கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நடைபெற்ற கலவரத்தினால் ஏற்பட்ட உயிர்,உடமை இழப்புகள் தொடர்பாக எவ்விதமான உறுதியான தகவல்களும் வெளிவரவில்லை.
கலவரம் ஏன் உருவானது?
கடந்த மாதம் 22ம் திகதி (22/02), தெல்தெனியப் பகுதியில், அம்பாலே பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான M.G.குமாரசிங்க என்பவர் தாக்கப்பட்டு, கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், கடந்த 2ம் திகதி (02/03) மரணமடைந்தார். குமாரசிங்கவின் மரணத்தைத் தொடர்ந்து ரயர்கள் எரிக்கப்பட்டு கலவரம் ஆரம்பமானது.
M.G.குமாரசிங்கவை நான்கு முஸ்லிம் நபர்கள் தாக்கியதாலேயே இந்த கலவரம் மூண்டதாக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.