இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் பிரதி ஆணையாளராக பதவி வகித்திருந்த நந்தலால் வீரசிங்க, சிறந்த ஆளுமையுடைவர் என்பதாலேயே ஜனாதிபதி அவரை ஆளுநராக நியமித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்த்தன என்பவரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் விளைவாக அண்மையில் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர்.
அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் தமது பதவியிலிருந்து விலகியதால், இலங்கையின் நிதிக்கட்டமைப்பு கடும் சிக்கலுக்கு உள்ளானது. இதேவேளை வரும் வாரங்களில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பும் இடம்பெறவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.