போரின்போது அல்லது போரின் பின்னர் போருடன் தொடர்புபடாத பல கொலைகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் அமெரிக்க வாழ் இலங்கை மக்களிடையே பேசிய இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கூறுகையில், ”விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவச் சிப்பாய் முதல் உயர் நிலை இராணுவ அதிகாரி வரை அனைவரும் சிரேஷ்ட போர் வீரர்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டமை குறித்து தமது அரசாங்கம் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை, எவ்வாறாயினும், போரின்போது அல்லது போரின் பின்னர் போருடன் தொடர்புபடாத பல கொலைகள் நடந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.
“போர் இடம்பெற்ற காலத்தில், முப்படைகளுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளினால் இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தி போருடன் தொடர்புபடாத கொலைகள் இடம்பெற்றிருந்தால் அது பாரிய குற்றம்” எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.