வடக்கு கிழக்கிலும் தீ வைப்பு சம்பவங்கள்

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் அரச எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்த மக்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி பிரமுகர்களாலும் அவர்களின் ஏற்பாட்டில் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்ட காடையர்களாளும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்கள் இப்போது நாடுமுழுவதும் அரசிற்கெதிரான வன்முறைப் போராட்டமாக மாறியுள்ளது.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் அமைந்திருந்த அங்கஜன் ராமநாதனின் மக்கள் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன், கடந்த பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் அமைந்திருந்த நஸீர் அஹமட்டின் கட்சி அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நஸீர் அஹமட், அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றிருந்தார். பின்னர் இவரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles