யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் காயமடைந்த்துள்ளார்.
மல்லாகம் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஜூட்சன் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரியை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை காவல்துறையினரின் தகவல்படி, இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு மோதல்களைத் தடுக்க முற்பட்டபோது, ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கியை பறிக்க முயன்றதாகவும், அதன் பின்னரே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உள்ளூர் மக்களின் தகவலின்படி, போதையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரே துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார் எனவும், உயிரிழந்த இளைஞருக்கும் அந்த காவல்துறை அதிகாரிக்கும் முன்பகை இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் சம்பவ இடத்தில் பதற்றம் நிலவியதால், மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஜூட்சன் சம்பவ இடத்த்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு, பதற்றத்தைத் தணித்தார்.