கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடும் இவ்வேளையில், இலங்கை ஜனாதிபதி கோத்தாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
2000ம் ஆண்டு யாழ் மிருசுவில் பகுதியில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப்பேரை சுட்டு படுகொலை செய்து, 2015இல் மரணதண்டனை பெற்ற இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரை, இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபை, மற்றும் சில அரசியல் கட்சிகள் கண்டணம் வெளியிட்டுள்ளபோதும், எவ்வித மாற்றமும் நிகழாது என்பது திண்ணம்.
உலக நாடுகள் கொரோனாவிற்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இலங்கையின் மனித உரிமை / சர்வாதிகார செயற்பாடுகளை அவதானித்துக்கொண்டிருக்க முடியாது. இப்படியான ஒரு நிலையில் மரண தண்டனை தீர்ப்பளித்து ஐந்து வருடங்களுக்குள், ஒரு கொலையாளியை விடுவித்தமை இலங்கையின் மனித உரிமை மற்றும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புத்தன்மையில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல சிங்கள இனவாத அமைப்புக்கள் மேற்படி சிப்பாயை விடுவிப்பதில், பல வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களிற்கு வேண்டுகோளை விடுத்து வந்தன. கடந்த வருடம்கூட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் ஒரு மரண தண்டனைக் குற்றவாளி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.