முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களின் வாடிகளுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டதால், 8 வாடிகள் 3 படகுகள், 2 இயந்திரம் 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளது. சேதமடைந்த உடமைகளின் விபரங்கள் இதுவரை முழுமையாக தெரியவரவில்லை.
மீனவர்கள் போராட்டத்தினை ஆராய அமைச்சர் விஜிதமுனி சொய்சா நேரில் வருகை தந்து சென்றதன் பின்னர், 24 மணித்தியாலங்களில் இந்த நாசகார வேலை இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் பதற்றம் நிலவுவதால், இராணுவத்தினரும், காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதியில் வந்து மீன்பிடிப்பதுமட்டுமில்லாது, சட்டத்திற்கு புறம்பான முறையில் சுருக்கு வலையினை பாவித்தும், டைனமைற்றை பாவித்தும் மீன் பிடித்தலை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் உயர் மட்ட அனுசரணையில்தான் இந்த சட்ட விரோத மீன்பிடி இடம்பெறுகின்றது என்பது நமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எல்லோருக்கும் தெரியும்.
90களில் கிழக்கு மாகாணத்தில் சிங்களவரைக் குடியேற்ற கையாண்ட அதே உத்தியைத்தான் இலங்கை அரசு வட மாகாணத்திலும் கையாளுகின்றது.
வடபகுதியில் சிங்கள மீனவர்களை மீன் பிடிக்கப் பண்ணுதல் –> தமிழர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தல் –> சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என இராணுவ முகாம் அமைத்தல் –> பின்னர் பௌத்த விகாரை அமைத்தல் என படிப்படியாக சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியேற்றும் இலங்கை அரசின் ஆக்கிரமிப்பு, இப்பொழுது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் இடம்பெறுவதுதான் தாங்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.