சவேந்திர சில்வாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

இலங்கையின் முப்படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு  எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளையும்  மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என  தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு, இறுதி யுத்தத்தில் சவேந்திரசில்வாவின் பணி குறித்தான முக்கிய விடயங்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவிகையில், 

எனது குழுவினர் பல வருடங்களாக சேகரித்த பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு ஆதாரங்கள் இந்த கோப்புதொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும் இலங்கை இராணுவத்தின் இரண்டாவது முக்கிய அதிகாரியாக சவேந்திரசில்வா நீடிப்பதற்கான அவசியம் எதுவுமில்லை என்று குறிப்பிட்ட ஜஸ்மின் சூக்கா, சவேந்திரசில்வாவை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தி  அவரிற்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு  எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு,

கிளிநொச்சி தாக்குதல்

கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்ட படைப்பிரிவின்  தளபதியாக சவேந்திரசில்வாவே செயற்பட்டார். அந்த தாக்குதல்களுக்கான உத்தரவையும் அவரே பிறப்பித்தார்.

மருத்துவமனைகள் ஐநா கட்டிடங்கள் போன்றவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் பொதுமக்கள் இறப்பிற்கான காரணமாக அவர் விளங்கினார்.

புதுக்குடியிருப்பு தாக்குதல்கள்

புதுக்குடியிருப்பின் மீதான தாக்குதல்களை சவேந்திரசில்வா தொடர்பான 58வது படைப்பிரிவே முன்னெடுத்தது. 

ஆளில்லா வேவு விமானங்கள் மூலம் புதுக்குடியிருப்பு பிரதேசமும், வைத்தியசாலையும் கண்காணிக்கப்பட்டன. புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்குதலிற்கு உள்ளாகின்றது என ஐநா அதிகாரிகளும் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரிற்கு தெரிவித்திருந்தனர். 

எனவே சவேந்திரசில்வாவிற்கு மருத்துவமனை தாக்கப்படுகின்றது என்பது தெரிந்திருந்தது என கருத இடமுண்டு. அதிகளவு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படைப்பிரிவினர் பாரதூரமான, சர்வதேச சட்ட மீறல்களை மேற்கொள்கின்றனர் என்பது சவேந்திர சில்வா அறிந்திருப்பார். இருப்பினும் அவர் தாக்குதல்களை நிறுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

பொக்கணை தாக்குதல்கள்

பொக்கணை மீதான தாக்குதல்களை சவேந்திர சில்வா தலைமையிலான படையினரே முன்னெடுத்தனர்.  

பால்மா பொதிகள் வழங்கப்படும் இடங்களில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் காரணமாக சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

புதுமாத்தளன் தாக்குதல்கள்

புதுமாத்தளன் மருத்துவமனை மீதான இராணுவ நடவடிக்கையை சவேந்திரசில்வா தலைமையிலான படைப்பிரிவினரே முன்னெடுத்தனர் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளன.

புதுமாத்தளன் மருத்துவமனை உட்பட அப்பகுதியில் இராணுவநடவடிக்கையை சவேந்திரசில்வாவே திட்டமிட்டு முன்னெடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.

வலைஞ்சர்மடம் தாக்குதல்கள்

வஞைசர்மடம் மருத்துவமனை மற்றும் தேவாலயம் மீதான தாக்குதல்களில் சவேந்திரசில்வாவின் படையணிகள் ஈடுபட்டன என நம்புவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன.இதன் காரணமாக பொதுமக்களிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

முள்ளிவாய்க்கால் தாக்குதல்

சவேந்திரசில்வாவிற்கு தனக்கு கீழ் உள்ள படையினர் முள்ளிவாய்க்காலில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் நிலைகளின் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்பது  தெரிந்திருந்தது என கருதுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன. மேலும் அவர் அப்பகுதியில் காணப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களும்  உள்ளன.

அவர் அப்பகுதியில் பிரசன்னமாகியிருந்து படையினரிற்கு உத்தரவுகளை வழங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக அவர் பொதுமக்கள் தாக்கப்படுவதை பார்வையிட்டிருக்கவேண்டும்.

சரணடைந்தவர்கள் தொடர்பாக

வட்டுவாகல் பாலத்தில் 58 படைப்பிரிவினரிடமே சரணடைதல் இடம்பெற்றது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 

சவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளுடன் கைகுலுக்கினார் என அதனை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டனர்

சரணடைந்தவர்களை படுகொலை செய்ததன் மூலம் அவர்களை தனது படையினரே காணாமலாக்கினார் என்பது சவேந்திர சில்வாவிற்கு தெரிந்திருந்தது அல்லது அவர் அந்த தகவலை மறைத்தார் என கருதுவதற்கான இடமுள்ளது.

கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள்

தனது வலுவான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படையினர் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதையில் ஈடுபட்டனர் என்பது சவேந்திரசில்வாவிற்கு தெரிந்திருந்தது என கருதுவதற்கான இடமுள்ளது. இருப்பினும் அவர் அதனைத் தடுப்பதற்கோ அல்லது குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கவோ தவறிவிட்டார்.

Latest articles

Similar articles